-ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்-
2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்கப் பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே இப்பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, 2027 ஜனவரி 31 ஆம் திகதியன்று 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
விண்ணப்பங்கள் இணையவழியில் (online) சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
விசேட தேவையுடைய மாணவர்கள், விண்ணப்பிக்க வேண்டிய முறை குறித்த விரிவான தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு 0112784537, 0012786616, 0112784208, 0112786200, 0112784201 தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கம் வழியாகவும் தொடர்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















