-ரணில் விக்கிரமசிங்க கேள்வி-
நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற தெளிவுப்படுத்தலை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையை மீள் கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பிலும் ஆளும் தரப்புக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு – 7 இல் அமைந்துள்ள கலந்துரையாடல் ஒன்றின் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
பேரிடர் முகாமைத்துவத்தின் போது, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி மிகவும் முக்கியமானதாகும். இராணுவமும் பொலிஸாரும் பேரழிவு வேலைகளைப் பொறுப்பேற்று முன்னணியில் நின்று செயல்படுவார்கள்.
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி மூலமாகவே அனைத்து நடவடிக்கைகளும் தொடர்புப்படுத்தப்படும். அதேபோல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால், இதுபோன்ற அவசரச் சந்தர்ப்பங்களில் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களையும் அழைத்து ஒருங்கிணைக்க முடியும்.
ஒரு பேரிடர் ஏற்பட்டால், முதலில் பாதுகாப்புப் பேரவை கூடி ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட வேண்டும். அதன்பிறகு அமைச்சரவை ஊடாக முடிவுகளை எடுக்க முடியும். பேரழிவு முகாமைத்துவக் குழுவும் சந்தித்து பேச வேண்டும். ஏனெனில் அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்ளடங்குவார்கள். ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லை. மறுபுறம் பேரழிவு முகாமைத்துவம் தொடர்பான ஒரு தேசியத் திட்டம் அரசாங்கத்திடம் இருந்தும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பேரிடர் முகாமைத்துவ திட்டத்தை நாங்கள் அமைச்சரவையில் அனுமதித்து வெளியிட்டோம். ஆனால், அதற்குள் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் வந்துவிட்டன. அன்றிலிருந்து இந்த திட்டத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் கூற வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
















