-துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை-
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற குழு கூட்டத்தின் போதே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டத்தில் மேற்பார்வைக் குழு பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்கு ஒரு தொகையை அறவிடும் முடிவு குறித்து கவனம் செலுத்திய நிலையிலேயே இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.
இவ்வேளையில் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இந்த நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு குறைகிறதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், பொலித்தீன் பைகளுக்காகச் செலுத்த வேண்டிய தொகையை எந்தத் தரப்பினர் தீர்மானித்தனர் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார்.
இதற்கு பொலித்தீன் பைகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை என பதிலளித்த அதிகாரிகள் குறிப்பிட்டார்.


















