மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபாவனையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர், மக்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் அற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்கீழ் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதாமடு பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. மாதாமடு ஆற்றங்கரையோரத்தில் கசிப்பு உற்பத்திசெய்யப்பட்டு வவுணதீவின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐந்து பறல்களில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 1000 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான கோடா மீட்கப்பட்டு, அழிக்கப்பட்டதாக வவுணதீவு பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் டிஸாந்த் தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் சட்ட விரோத போதைவஸ்து மற்றும் கசிப்பு உற்பத்திகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் இதற்கு பொதுமக்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.















