-வேறொருவரின் QR குறியீடும் செல்லாது-
நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எக்காரணம் கொண்டும் போத்தல்கள், கான்களில் எரிபொருள் வழங்கப்படாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ கூறினார்.
QR குறியீட்டு நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. செல்லுபடியாகும் QR குறியீடு இருந்தாலும், போத்தல்கள், கேன்களில் எந்த காரணம் கொண்டும் எரிபொருள் வழங்கப்படமாட்டாது. முறையாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.
QR குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்துடன் நுகர்வோர் வருகைதர வேண்டும். வேறொருவரின் குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது மாற்று வாகனத்தில் வந்தோ எரிபொருள் பெற முயற்சித்தால், எரிபொருள் வழங்கப்படமாட்டாது. ஆரம்பத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தன.
ஆனால், தற்போது முறைமை வழமைக்குத் திரும்பியுள்ளது, புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் இன்னும் QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும்.
இந்த முறையைச் சரியாக அமுல்படுத்துவதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பொதுமக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள எமது ஊழியர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.


















