போலி விசாவை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.
27 வயதுடைய சந்தேக நபரான பங்களாதேஷ் பிரஜை நேற்று முற்பகல் 10.15 மணியளவில் கட்டாரின் டோஹா நோக்கிப் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் தனது விசா மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
அவர் சமர்ப்பித்த விசா மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அனைத்து ஆவணங்களையும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி பரிசோதித்ததில் விசா போலியானது என்று தெரியவந்துள்ளது.
விசாரணைகளில், சந்தேக நபரான பங்களாதேஷ் பிரஜை ஒரு தரகருக்கு 63,000 ரூபா கொடுத்து போலியான விசா பெற்றுள்ளதாகவும் டோஹா ஊடாக ஸ்பெயினுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


















