மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன்படி மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடி கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மின் அலகு ஒன்றின் உற்பத்திச் செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையே காணப்படுகிறது.
நாம் நாட்டினைப் பொறுப்பேற்கும்போது மின் அலகு ஒன்றின் கொள்வனவு அல்லது உற்பத்திச் செலவு 37 ரூபாவாக இருந்தது. தற்போது அதனை 29 ரூபாவாக, அதாவது 22 சதவீதத்தினால் குறைக்க எம்மால் முடிந்துள்ளது. எமது இலக்கு அந்தப் பெறுமதியை 25 ரூபாவாகக் குறைப்பதாகும்.
அதனைச் செய்து, வாக்குறுதி அளித்தவாறு 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.


















