மத்திய கிழக்கு போர் காரணமாக வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கப்பட்ட சில பொருட்களை இதுவரை அனுப்ப முடியவில்லை என குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை அனுப்புவதில் தடங்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக அப்பிராந்தியத்திற்கான பெருமள விலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சர்வதேச தபால் சேவைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமதங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட தபால்மா அதிபர், அந்தந்த நாடுகளின் தபால் நிர்வாகங்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வருவதாகவும் தெரிவித்தார். நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் சர்வதேச தபால் சேவைகளை வழமை போன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் பொருட்கள் தாமதமாவதால், குறிப்பாக பழுதடையக்கூடிய பொருட்கள் தொடர்பில் அபாயம் காணப்படுவதனால், அவை வீணாகும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, தற்போதைய நிலைமையைப் புரிந்து கொண்டு வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பொருட்களை அனுப்புவதில் தற்போதுள்ள சிரமங்கள் இலங்கைக்கு மாத்தி ரமன்றி ஏனைய நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


















