-சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி-
மனநலம் தொடர்பான சட்ட மூலம் ஒன்றை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மனநல நிறுவனத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற வைபவத்தில் பங்கேற்று விசேட உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் மனநலச் சேவை சரியான திருப்புமுனையில் உள்ளது. ஆனால் நாட்டின் மனநலக் கொள்கை நூறு ஆண்டுகள் பழமையானது. எனவே மனநலம் தொடர்பான சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்படும் என்றும், அதைப் புதுப்பிக்கும் செயல்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இது ஒரு கடினமான பணியாக இருந்தாலும், அதற்கான வரைவுகள் ஆரம்பப் பணிகளுக்காக நாடாளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களின் கருத்துகள் பெறப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.















