கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் உயிரிழந்தார்.
இந்த விபத்து நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர், வாகனத்தின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனம் திடீரென நகரத் தொடங்கியுள்ளது. இதன்போது பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அந்த வாகனத்தில் சிக்கினர்.
வாகனத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த மற்றைய மாணவன் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தான் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக வாகனத்தின் உரிமையாளரான பணிப்பாளர் தெரிவித்தார்.


















