ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு துப்பாக்கிதாரிகள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
ஊருபொக்க – மாத்தறை வீதியின் தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள மதகிற்கு அருகாமையில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையிலேயே இது மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைய, ஊருபொக்க பொலிஸாரினால் இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலஹிட்டியாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்றைய தினம் (12) பிற்பகல் வேளையில் வந்த இனந்தெரியாத இருவர், இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார், மித்தேனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி (Pistol) ரகத்தைச் சேர்ந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


















