இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் இருந்து தவிர்ந்திருப்பதாகவும், அந்த அதிகாரிகள் யார் என்பது தொடர்பான தீர்மானத்தை இன்றைய தினத்துக்குள் மேற்கொள்வதாகவும் இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் கடந்த மாதம் 4 ஆம் திகதிமுதல் முன்னெடுத்துவரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து, 24 கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு எமது தொழிற்சங்கங்கள் போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
ஆரம்பமாக நாங்கள் இரண்டுநாள் சுகயீன விடுமுறை அறிவித்து ஊழியர்கள் அனைவரையும் கொழும்புக்கு அழைத்துவந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.
அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வை பெற்றுத்தர தவறியதால், அடுத்த கட்ட நடவடிக்கையாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தோம். என்றாலும் அரசாங்கம் எங்களுக்கு இதுவரை முறையான தீர்வொன்றை வழங்கத் தவறி இருக்கிறது. அதனால் இன்றைய தினத்துக்குள் அரசாங்கம் முறையான தீர்வொன்றை வழங்கத் தவறும் பட்சத்தில் எமது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் இருந்து தவிர்ந்திருப்பதற்கு தீர்மானிக்க இருக்கிறோம்.
இந்தப் புதிய முறையை (நன் கோபரேஷன்) எனும் ஒத்துழைப்பில் இருந்து நீங்கும் தொழிற்சங்க நடவடிக்கையாகும். அது அமைச்சு அதிகாரிகள் மற்றும் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் காரியாலய அதிகாரிகளை இலக்குவைத்து மேற்கொள்ள இருக்கிறோம். என்றாலும் எமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட அழைப்புவிடுத்தால் அதில் கலந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்.
அத்துடன் எமது 24 கோரிக்கைகளில் அதிகமானவை இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பானதாகும். குறிப்பாக புதிய நிறுவனங்கள் அமைத்தல், பணிப்பாளர் சபை அமைத்தல், ஊழியர்களை இணைத்துக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.
அரசாங்கம் தற்போது முறையற்ற வகையில் மேற்கொள்ள இருக்கும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெற்றால், பல பிரச்சினைகள் தலைதூக்க இடமிருக்கிறது. அதனாலே மறுசீரமைப்பு நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறு நாங்கள் தெரிவித்து வருகிறோம் என்றார்.

















