-முன்னிலை சோசலிச கட்சி கவலை-
-செ.கபிலன்-
தமது கட்சியைச் சேர்ந்த லலித் குகன் உள்ளிட்ட இருவரைக் கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு இருப்பது மிகுந்த கவலைக்குரியது என முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில், லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
லலித் குகன் உள்ளிட்ட இரு தோழர்கள் 2011 ஆம் ஆண்டு 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்ஷ மீது இதுதொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த காணாமலாக்கல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குக்கு தனக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு இல்லை எனக் காரணம் காட்டி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நீதிமன்றில் சமூகமளிப்பதைத் தவிர்த்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நீதிமன்றைத் தவிர்ப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் அவர் கூறினார்.
அன்றைய காலத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த ஹெகலிய ரம்புக்வெல்ல, லலித் குகன் காணாமலாக்கப்படவில்லை என்றும், அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சும் அன்றைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்ததாக நீதிமன்றில் முன்னிலையாகி கூறியிருந்தார் எனவும் அவர் நினைவூட்டினார். இதன் அடிப்படையில், இந்த கடத்தல், காணாமலாக்கல் மற்றும் கொலைகளுக்கு கோட்டாபாய ராஜபக்ஷவே பொறுப்பாளி என அவர் வலியுறுத்தினார்.
இன்றைய சூழலில் புலிகள் அமைப்பு இல்லை என்பதால், யாழ்ப்பாண நீதிமன்றில் சமூகமளிக்க கோட்டாபாய ராஜபக்ஷக்கு எந்தவித பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார். கோட்டாபாய ராஜபக்ஷ கொழும்பில் பொதுவெளியில் நடைபயிற்சி மேற்கொள்வதும், நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் நடைபெறுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பாதுகாப்பற்றது என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணம் பாதுகாப்பில்லை என கூறியவரே, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பின்னர் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நீதிமன்ற விலக்கு காரணமாக அவர் நீதிமன்றில் சமூகமளிக்கவில்லை என்றும், பதவியில் இருந்து விலகிய பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றின் மூலம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் சமூகமளிக்காமல் இருக்க உத்தரவு பெற்றதாகவும் கூறினார்.
அந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றை அணுகியபோது, கோட்டாபாய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதிமன்றில் சமூகமளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதியே என உயர் நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்ததாகவும் அவர் தெரிவித்தார். இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் கோட்டாபாய ராஜபக்ஷ நீதிமன்றில் சமூகமளிக்காமல் இருப்பது தொடர்ச்சியான நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
‘ஒரு சாதாரண குடிமகன் இவ்வாறு நீதிமன்றை புறக்கணித்து நடந்து கொள்ள முடியுமா? அப்படியானால் கோட்டாபாய ராஜபக்ஷ மட்டும் எவ்வாறு நீதிமன்றை புறக்கணிக்க முடிகிறது?’ எனக் கேள்வி எழுப்பிய அவர், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதைக் தற்போதைய அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


















