வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடையிடையே மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வெப்பச் சலன செயற்பாட்டினால் உருவாகும் இம்மழை இடி மின்னலுடன் இணைந்த மழையாக இருக்கும். இக்காலப்பகுதியில் பரவலாக அனைத்துப் பிரதேசங்களும் மழையைப் பெறும்.
ஆனால் ஒரே நாளில் அனைத்துப் பிரதேசங்களும் மழையைப் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் இம்மழை கனமழையாகவும் கிடைக்கக்கூடும்.
2025/2026 காலபோக நெற்செய்கையில் புழுதி விதைப்பை மேற்கொண்டவர்களுக்கும், மேற்கொள்ள இருப்பவர்களுக்கும் இம்மழை பயனுள்ளதாக அமையும்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவ்வருட வடகீழ்ப் பருவக்காற்று மழை ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அளவில் ஆரம்பமாகும்.
இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்றின் உடைவு தாழமுக்கத்தோடு ஆரம்பமாகும். இதனால் ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை 5 தாழமுக்க நிகழ்வுகள் வங்காள விரிகுடாவில் தோன்றும் வாய்ப்புள்ளது.
இதில் இரண்டு தாழமுக்கங்கள் புயலாகவும் மாற்றமடையும் வாய்ப்புள்ளது. இதனால் நவம்பர் மாதத்தின் 20 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதத்தின் 15 ஆம் திகதி வரை செறிவான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே இவ்வாண்டின் காலபோக நெற்செய்கையின் சேற்று விதைப்பை மேற்கொள்ளும் விவசாயிகள் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு மேற்கொள்வது செறிவான கனமழை மூலம் நெற்பயிர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கும்.
விவசாயிகள் இது தொடர்பாக நெற்செய்கையோடு தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்படுவது சிறந்தது என தெரிவித்துள்ளார்.


















