-சாகர காரியவசம்-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அமரகீர்த்தி அத்துக்கோரல எவ்வித தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கொல்லப்படவில்லை என்றும், அவர் கொண்டிருந்த அரசியல் கொள்கைக்காகவே வீதியில் வைத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், தனது கடமையைச் சரியாக நிறைவேற்றி தனது பிரபுவைப் பாதுகாக்க முயன்றதாலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த அவர், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது நீதித்துறை மீதான கௌரவத்தை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்காக தற்போது 12 இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், இந்த இளைஞர்களின் மனதில் வன்முறையைத் தூண்டி அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய உண்மையான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் ஒரு குடிமகனுக்குக் கூட தீங்கு இழைக்காத நபர்களை வீதியில் அடித்துக் கொல்லும் அளவிற்கு இளைஞர்களின் மனதில் வெறுப்பை விதைத்த தலைவர்கள், இன்று ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அமர்ந்திருப்பது கவலைக்குரியது என அவர் தெரிவித்தார்.


















