தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களை நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்து வைத்தியசாலைகளுக்கு விநியோகித்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஊழல் மற்றும் வீணடிப்புக்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பினால் 2025 டிசம்பரில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தரம் குறைந்த ஊசி மருந்து செலுத்தப்பட்ட பின்னர் வைத்தியசாலையொன்றில் இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நிறுவனமொன்று தரம் குறைந்த மருந்துகளை 100 க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், தரம் தொடர்பான சிக்கல்களால் 10 வகையான ஊசி மருந்துகளை உடனடியாக மீளப்பெறுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
வாந்தி மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்துகள், மனநலம் மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கான ஊசி மருந்துகள், தீவிர தொற்று நோய்களுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியன மீளப்பெறப்பட்ட முக்கிய மருந்துகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


















