1500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இறக்குமதி அனுமதிக் காலம் நிறைவடைந்த பின்பே இந்த கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்ததாக சுங்கம் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2025 மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை மாத்திரமே உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதனை இறக்குமதியாளர்கள் மீறிய தால், அந்த சரக்குகளை விடுவிக்க முடியாது என்றும், அவை கட்டாயமாக மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் சரக்குகளைப் பெற்றுக்கொள்ளாததால் அவை கைவிடப்பட்ட சரக்குகளாகக் கருதப்படுகின்றன. அத்துடன் மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான அதிக செலவு காரணமாக இறக்குமதியாளர்கள் அதற்கு முன்வரவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அதனால் சுங்க வரி அல்லது துறைமுகக் கட்டணங்களையும் வசூலிக்க முடியாது உள்ளதாகவும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.


















