ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அரசாங்கத்தில் உள்ளவர்களும் குறிப்பிடும் பொய்களுக்கு வரி அறவிட்டால், நாட்டின் மொத்த கடன்களையும் செலுத்தி விடலாம் ஏனெனில் அந்தளவுக்கு அவர்கள் பொய்களை கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் பல உள்ளன. எரிபொருள் தொடர்பிலும் மின்சாரம் தொடர்பிலும் பல பொய்களை கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. பொய்களுக்கு வரி அறவிட்டால் ஜனாதிபதி கூறிய பொய்களின் மூலமே வெளிநாட்டுக் கடனில் அரைவாசியை செலுத்திவிட முடியும். அத்துடன் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பொய்களை எடுத்துக்கொண்டால் அதற்கான வரியில் எஞ்சிய அரைவாசி கடனையும் செலுத்தி முடித்துவிடலாம். அந்தளவுக்கு இவர்கள் பொய்யுரைத்துள்ளார்கள்.
பொய்களின் கெப்டன் ஒருவர் இருக்கின்றார். அவரின் உடல் முழுவதும் அதுவே இருக்கின்றது. அவர் பொய்யில் ஊறியவராக இருக்கின்றார். 70 வருட சாபம் என்று கூறிக்கொண்டு அதிலேயே வாழ்வதற்கு முயற்சிக்கின்றனர்.
ஜனாதிபதி சபையில் உரையாற்றிய போது சிறிய அனுமான் தொடர்பில் குறிப்பிட்டார். ஆனால் பெரிய அனுமான்தான் விகாரையில் தீவைத்தது. தீ பரவும் போது சிறிய அனுமானையே தேடுகின்றனர். அத்துடன் எப்போது பார்த்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழு கதைகளையே கூறுகின்றனர். இவர்கள் சர்வதேச தலைவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
போலியான வாக்குறுதிகளை வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. மக்களின் அடிப்படை பற்றிப் பேசும் போது ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சிரிக்கிறார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இவர்களுக்கு அரசியல் பிரவேசத்துக்கான ஆயுதமாகவே காணப்பட்டது. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அந்தளவுக்கு மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் என்றார்.


















