தேசபந்து தென்னகோன் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மிகச் சிறந்ததாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் அரசியல் உத்தரவுகளுக்கமையவே செயல்பட்டார். அரசியல் இலக்குகளை அடைவதற்கு பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் என்னவாகும் என்பதற்கு தேசபந்து விவகாரம் சிறந்த உதாரணமாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குவதற்கான விதிமுறையை நீக்குவதற்கு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதற்கமையவே ஒரு முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு அவர் அந்த பதவியை வகிக்க தகுதியற்றவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறந்த தீர்மானம் என்று நான் நினைக்கின்றேன்.
காரணம் தேசபந்து பல சந்தர்ப்பங்களில் சட்டத்துக்கமைய செயல்படவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் அரசியல் உத்தரவுகளுக்கமையவே செயல்பட்டார். எனவே அவரது இந்த விவகாரம் இன்றைய அரச உத்தியோகத்தர்களுக்கு சிறந்த பாடமாகும்.
இழுக்பிட்டியவின் உதாரணத்தைப் போன்று தேசபந்துவும் சிறந்த உதாரணமாகும். இந்த சம்பவங்கள் நாட்டுக்கு சிறந்த படிப்பினையுமாகும். அரசியல் இலக்குகளை அடைவதற்கு பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால் என்னவாகும் என்பதற்கு தேசபந்து விவகாரம் சிறந்த உதாரணமாகும்.
அதனால் இன்று அவர் தனித்து விடப்பட்டிருக்கின்றார். மேலும் அரசாங்கம் பாராளுமன்ற செயல்முறைகளிலும் பொலிஸ் ஆணைக்குழுவின் சுதந்திரத்திலும் தலையிடுமாயின் அது தவறாகும் . இவற்றைக் கருத்திற் கொண்டு பொருத்தமான தகுதியான ஒருவரை அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டும் என்றார்.


















