-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கவலை-
இலங்கையில் நடைமுறையில் உள்ள இடர்முகாமைத்துவ திட்டம் தோல்வி கண்டிருக்கும் நிலையில், அதனை மாற்றியமைத்து சமகாலத்திற்கு ஏற்றால்போல் இடர்முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ கூறினார்.
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதெனிய பிரதேச மக்களுக்கான ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் தம்பதெனிய ஆதார வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
பேரிடரினால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அவர்களின் வாழ்வாதாரங்களை மீள கட்டியெழுப்ப நாம் கைகொடுக்க வேண்டும். அவர்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளன.
இளம் குழந்தைகள் முதல் இளம் தலைமுறை வரை, அனைவரும் கடுமையான பேரிடரை சந்தித்து, துயரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், நாட்டில் காணப்பட்டு வரும் இடர் முகாமைத்துவ திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டிய தேவை காணப்படுகின்றன.
சீரற்ற வானிலை நிலவரங்களை துல்லியமாக அறிவிப்புச் செய்யும் விதமான பயனுள்ள முன்னெடுப்புகளை நாம் ஆரம்பிக்க வேண்டும். நமது நாட்டிற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப டாப்ளர் ரேடார் கருவிகள் இன்னும் இல்லை. சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இடர் முகாமைத்துவ பொறிமுறையானது தோல்வி கண்டுள்ளன. இரண்டு வார முன்னறிவிப்புகளுக்குப் பிறகும் சரியாக உரிய நடவடிக்கைகளை வகுத்துச் செயற்படுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த துயரத்திலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ளாவிட்டால், நமது குறைபாடுகளைச் சரிசெய்து முன்னேறாவிட்டால், காலநிலை மாற்றங்களை எம்மால் எதிர்கொள்ள முடியாது போகும்.
எனவே, காலாவதியான காலத்திற்கு பொருந்தாத வெறும் பேச்சுக்கும் வெறும் வார்த்தைக்கும் சுருங்கிய இடர் முகாமைத்து சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும். இந்த இயற்கைச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய சட்டங்களையும், நிறுவன கட்டமைப்புகளையும் ஒரு நாடாக தாபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில் தெளிவான மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை அரசாங்கம் அறிவித்ததுபோல உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
காரணங்களைக் கூறுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தேவை மற்றும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ள நேரத்தில், அவசர தீர்வுகளும் நிவாரணங்களும் தேவைப்படுகின்றன. இச்சமயம் விரைவாகச் செயல்படுவது அரசாங்கத்தின் கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
















