மின்சாரசபை உத்தியோகத்தர்களை சுய ஓய்வு பெறச் செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் திட்டத்துக்காக நாட்டின் மின் பாவனையாளர்களிடமிருந்து ஒரு காலாண்டுக்கு 875 மில்லியன் ரூபாவை அறவிட தீர்மானித்துள்ளனர்.
அந்தவகையில், 5 ஆண்டுகளுக்கு 1750 கோடி ரூபா செலவு மின் பாவனையாளர்கள் மீது சுமத்தப்படவுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 9000 ரூபா கட்டணம் 6000 ஆகக் குறைக்கப்படும் என்றும், 6000 ரூபா கட்டணம் 3000 ரூபாவாகக் குறைக்கப்படும் என்றும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்திருந்தார்.
நாட்டிலுள்ள சுமார் 80 இலட்சம் மின் பாவனையாளர்கள் இந்த பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டனர். ஆனால் தற்போது 11 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சாரசபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளமைக்கான காரணங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மின்சாரசபையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக சுயமாக ஓய்வு பெறுவதற்கான முறைமைக்காக 5 ஆண்டுகளுக்கு கடன் தொகையைப் பெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடன் தவணையை செலுத்துவதற்கு 875 மில்லியன் ரூபா (87.5 கோடி ரூபா) மூன்று மாதங்களில் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த செலவை நாட்டிலுள்ள மின் பாவனையாளர்களிடமிருந்தே அறவிட திட்டமிடுகின்றனர்.
மின்சாரசபை உத்தியோகத்தர்களை சுய ஓய்வு பெறச் செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் திட்டத்துக்காக நாட்டின் மின்பாவனையாளர்களிடமிருந்து ஒரு காலாண்டுக்கு 875 மில்லியன் ரூபாவை அறவிட தீர்மானித்துள்ளனர் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.


















