-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வீஞ்சு கரைவலை தொழில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் வீஞ்சு முறைமையில் கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தடையை மீறி சுண்டிக்குளம் பகுதியில் வீஞ்சை பாவித்து கரைவலை தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகளவான கரைவலை தொழிலாளர்கள் வீஞ்சு முறைமையை நிறுத்தியுள்ள போதும் ஒரு சில கரைவலை தொழிலாளர்கள் இவ்வாறு மறைமுகமாக வீஞ்சு முறையை பயன்படுத்துவதால் ஏனைய கரைவலை தொழிலாளர்கள் உட்பட சிறு தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
மனிதவலுவை அடிப்படையாக கொண்டு கரைவலை தொழிலை மேற்கொள்ளுமாறு கூறி வீஞ்சு முறையை அரசாங்கம் தடை செய்துள்ள நிலையில் மீண்டும் வீஞ்சுத் தொழிலை அனுமதிக்க கோரி கரைவலை தொழிலாளர்களால் நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















