2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பமாகிய நிலையில் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்குள் மாணவர்களை அனுமதிக்காததால் கொட்டும் மழையிலும் வெளியில் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு – பட்டிருப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் நேற்று ஆரம்பமான க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு ஆலயங்களுக்கு சென்று இறை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மாணவர்கள் பெற்றோர்களுடன் பரீட்சை நிலையத்திற்கு வருகை தந்தனர்.
இதன்போது மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்கு உள் அனுமதிக்காததால் மாணவர்களும் பெற்றோர்களும் கொட்டும் மழையிலும் காத்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
இருந்தபோதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை பரீட்சைக்கு பொறுப்பான அதிகாரிகள் தேவையான முன்னாய்த்த நடவடிக்கைகளை நேர காலத்துடன் முடிக்காத காரணத்தினால் உரிய நேரத்திற்கு பாடசாலை பரீட்சை மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை.


















