வெள்ளை வான் கலாச்சாரத்தின் பிதாமகன்கள் இன்று தேசிய மக்கள் சக்தியின் மீது சேறுபூச நினைப்பது வேடிக்கையானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கூறும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாட்டைப் பாதாள உலகக் கூடாரமாக மாற்றியவர்கள் யார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
வெள்ளை வான் கலாசாரத்தையும், பகிரங்கப் படுகொலைகளையும் சட்டபூர்வமாக்கிய ஒரு அரசியல் குழுவின் பிரதிநிதியாக இருந்துகொண்டு,
சாகர காரியவசம் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது. தற்போதைய அரசு பொலிஸ் திணைக்களத்துக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
அதனாலேயே, கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினால் மறைக்கப்பட்ட பல குற்றச் செயல்கள் இன்று வெளிச்சத்துக்கு வருவதுடன், குற்றவாளிகள் தராதரம் பாராது கைது செய்யப்படுகின்றனர்.
இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் திசைதிருப்பவே தேசிய மக்கள் சக்தி அரசு பாதாள உலகத்துடன் இணைந்துள்ளது என்ற அப்பட்டமான பொய்யை மொட்டுக் கட்சியினர் பரப்புகின்றனர்.
சட்டத்தரணியும், அவரின் மனைவியும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில் நீதியைத் தடுத்ததைப் போலன்றி, எமது ஆட்சியில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தேர்தல் களத்தில் மக்கள் தங்களை முற்றாக நிராகரித்துவிட்டனர் என்பதை உணர்ந்துள்ள மொட்டுக் கட்சி, இவ்வாறான அச்சமூட்டும் கதைகள் மூலம் மீண்டும் அரசியல் உயிர் பெற முயற்சிக்கின்றது.
பிரதமரின் கருத்துக்களைத் திரிபுபடுத்தி இராணுவத்தினரைத் தூண்டிவிடும் இவர்களின் இழிவான அரசியல் இனிமேலும் எடுபடாது. – என்றார்.


















