-கைவிடப்பட்ட நிலையில் மீட்ட பொலிஸ்-
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய சாலைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, புதன்கிழமை காலை மர்ம நபரால் கடத்தப்பட்டு, தியதலாவ வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட பேருந்து வெல்லவாய சாலைக்குச் சொந்தமான மாத்தறை – பண்டாரவளை பேருந்து என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட பேருந்து மாத்தறையிலிருந்து பண்டாரவளைக்குச் சென்று, வழக்கம் போல் பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மாத்தறை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை காலை 6.45 மணிக்கு பேருந்தைத் தேடி ஓட்டுநர் அங்கு சென்ற போது, பேருந்து காணாமல் போனதைக் கண்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
பின்னர், பேருந்து தியதலாவ வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில், பொலிஸார் பேருந்தை கண்டுபிடித்தனர்.


















