துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் பிணையில் விடுதலையான அவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.
இதன் காரணமாக அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
கடவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















