-அலி சப்ரி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை-
வாகன இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணி குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகலாம் என்றும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வாகன இறக்குமதியால் அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்படும் தாக்கத்தை திறைசேரி மிக நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும். மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டாலும் கூட இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து வெளிப்படையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக, ஏற்கனவே கடன் கடிதங்கள் திறக்கப்பட்ட அல்லது கப்பலில் ஏற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படாதவாறு விதிகள் அமைய வேண்டும்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காலப்பகுதியில், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட கட்டுப்பாட்டுப் புள்ளிகளில் உள்ள சில அதிகாரிகள் இந்த அவசரகாலச் சூழலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஊழல்களில் ஈடுபடக்கூடும்.
இதனைத் தடுக்க முறையான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் அவசியம்.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பில் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், சுற்றுலா வருமானம் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


















