போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கணேமுல்ல பொலிஸ் பிரிவில் 04 கிலோகிராம் 423 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,450 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இக்கடத்தலுக்கு குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
சந்தேகநபர்கள் இருவரும் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கடந்த 24 ஆம் திகதி இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரால் அங்கு கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்கள் இந்திய அதிகாரிகளால் சனிக்கிழமை இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 57 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


















