இலங்கையின் பல்கலைக்கழக முறைமையில் நிலவும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, எதிர்வரும் ஜூலை 2-ஆம் திகதி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் தற்போதுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது,பல்கலைக்கழக முறைமையின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
பல்கலைக்கழகக் கல்வியின் தரம் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக, மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

















