கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், மதுபானம் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாரபட்சமாக நடந்துகொள்வதாக அமெரிக்க நிர்வாகம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த வரி விதிப்பு வந்துள்ளது.
இது உலகளாவிய வர்த்தகப் போரில் ஒரு புதிய முனையைத் திறக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைய்ன், சீமெந்து மற்றும் ஐஸ் ஹாக்கி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீது இறக்குமதி வரிகளை விதித்தபோது ட்ரம்ப், 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் 338 ஆவது பிரிவைப் பயன்படுத்தினார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகக் கருதப்படும் வர்த்தகப் பங்காளிகள் மீது 50% வரை தண்டனைக்குரிய வரிகளை விதிக்க இச்சட்டம் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில், இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதற்கான முதல் நிகழ்வாக இது அமைந்தது.
30 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள், பால் பொருட்கள், நீச்சல் குளங்கள், தளபாடங்கள், மீன்பிடித் தூண்டில்கள், விதைகள், ஆடைகள் மற்றும் செயற்கை தலைமுடிகள் (wigs) உள்ளிட்ட பிற பொருட்களுக்கும் பொருந்தும்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு இந்த வரிகள் பொருந்தும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் (US Census Bureau) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த 382 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களில் இது சுமார் 5.2 சதவீதமாகும்.


















