இலங்கையின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை கண்டுகளிக்கக்கூடிய எஸ்.எல்.சி. ரி20 லீக் (SLC T20 League) உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடர் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நீலம் (Team Blues) மற்றும் பச்சை (Team Greens) அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகிறது.
இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியுடன் சூடுபிடிக்கும் என்பது நிச்சயம்.
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிகளின் தலைவர்களாக விளையாடிய சரித் அசலன்க (2016), கமிந்து மெண்டிஸ் (2028), துனித் வெல்லாலகே (2022) ஆகியோர் ரி20 உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரில் முறையே டீம் க்றேஸ், டீன் க்றீன்ஸ், டீம் ப்ளூஸ் அணிகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் சகலதுறைகளிலும் பிரகாசிக்கக்கூடிய வீரர்களாவர்.

இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகளிலும் தேசிய வீரர்கள் பலர் இடம்பெறுவதால் எஸ்.எல்.சி. ரி20 லீக் விறுவிறுப்பை தோற்றுவிக்கவுள்ளது.
துனித் வெல்லாலகே தலைமையிலான டீம் ப்ளூஸ் அணியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் ஜனித் பெரேரா, தசுன் ஷானக்க ஆகிய பிரசித்தி பெற்ற துடுப்பாட்ட வீரர்களும் அசித்த பெர்னாண்டோ, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க, மொஹமத் ஷிராஸ், அக்கில தனஞ்சய, ஜெவ்றி வெண்டசே போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் இடம்பெறுகின்றனர்.
இதேவேளை, கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் அணியில் குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, பானுக்க ராஜபக்ஷ, சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, சொனால் தினூஷ ஆகிய சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் துஷ்மன்த சமீர, நுவன் துஷார, சாமிக்க கருணாரட்ன, ட்ரவின் மெத்யூஸ், ப்ரமோத் மதுஷான் ஆகிய பந்துவீச்சாளர்களும் இடம்பெறுகின்றனர்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர்கள் அந்தந்த அணிகளில் இடம்பெறுவது உறுதியான போதிலும் பந்துவீச்சாளர்களில் எல்லோரும் இறுதி அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் பங்குபற்றும் சரித் அசலன்க தலைமையிலான டீம் க்றேஸ் அணியில் தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, லஹிரு உதார, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் பிரதான துடுப்பாட்ட வீரர்களாகவும் ரமேஷ் மெண்டிஸ், சமிந்து விக்ரமசிங்க, மிலான் ரத்நாயக்க ஆகியோர் சகலதுறை ஆட்டக்காரர்களாவும் விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்ஷன, ஏஷான் மாலிங்க, பினுர பெர்னாண்டோ ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர்.

இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை லீக் போட்டிகள் நடைபெறுவதுடன் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று நான்கு தடவைகள் எதிர்த்தாடும்.
லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும்.

















