22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று (01) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனுக்கள் அழைக்கப்பட்டபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின்படி நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது என வாதிட்டார்.
அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள் விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.


















