ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னரே அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
2013 ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 விமானங்களை கொள்வனவு செய்த போது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியான நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
அது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மே மாதம் 08 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில், அது தற்கொலை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
விமானக் கொள்வனவு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பின்னணியில், இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, இன்று (04) முற்பகல் 9.15 மணியளவில் நாமல் ராஜபக்ஷ குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.
சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் பல அரசியல் பிரதிநிதிகளும் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அங்கு சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்தது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையின் விளைவாகவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்புடன் விசாரணைகள் தற்போது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த கொடுக்கல் வாங்கலின் போது ஒரு விமானத்திலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெறுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோக்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. அன்றைய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் தனிப்பட்ட உரிமையைக் கொண்ட சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியிலுள்ள BIZ Solutions INC எனும் கணக்கிலிருந்து 2014 நவம்பர் 19 மற்றும் டிசம்பர் 22 ஆகிய திகதிகளில் 02 சந்தர்ப்பங்களில் நிமல் பெரேரா என்பவர் தலைவராக இருக்கும் Sabre Vision holding ltd எனும் நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரிலுள்ள OCBC வங்கியிலுள்ள கணக்கிற்கு பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணை அதிகாரிகள் கடந்த நாட்களில் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிமல் பெரேரா என்பவரைக் கண்டறிவதற்காக அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் நாட்டிற்கு வர மறுக்கும் அவர், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு சத்தியக்கடதாசி ஒன்றை வழங்கியுள்ளார்.

BIZ Solutions INC எனும் கணக்கிலிருந்து தனக்குச் சொந்தமான Sabre Vision holding ltd நிறுவனத்தின் கணக்கிற்கு கிடைத்த 08 இலட்சம் அமெரிக்க டொலர் பணத்தை இலங்கை ரூபாயாக இந்த சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்ததாக அவர் கூறுகிறார். அது இலங்கை மதிப்பில் 100 மில்லியன் ரூபாயாகும்.
கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, Air Bus தாய் நிறுவனம் இந்த சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தற்போது உடன்பட்டுள்ளது. அதன்படி Air bus நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இதுவரை 03 சந்தர்ப்பங்களில் நாட்டிற்கு வருகை தந்து 04 வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் எயார்பஸ் நிறுவனத்திற்கும் சந்தேகநபருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த அனைத்து விடயங்களையும் பரிசீலித்தே இந்த சந்தேகநபரைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதை நிராகரித்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நான் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.”
அதனைத் தொடர்ந்து சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சார்பில் பிணை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ் நீதிமன்றத்தில் அறிக்கை செய்தார்.
“கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, எனது கட்சிக்காரர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருப்பது வெறும் நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே. பிரெஞ்சு அதிகாரிகளோ அல்லது Airbus நிறுவனத்தின் அதிகாரிகளோ இவருக்குப் பணம் கொடுத்ததாகக் கூறவில்லை. அந்த நிமல் பெரேரா சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு “கிரிஷ் கொடுக்கல் வாங்கல்” தொடர்பில் தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வழக்கு தொடர்பாகவும் பணம் வந்ததாகக் கூறப்படுவது Sabre Vision holding ltd எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான கணக்கிற்கே ஆகும். ஆனால் அங்கு நிமல் பெரேரா அந்த கணக்கு தனக்குச் சொந்தமானது அல்ல என்றும், அது ஒரு இத்தாலிய நண்பருடையது என்றும் கூறியிருந்தார். அதன்படி அன்று நிமல் பெரேரா ஒன்றைச் சொல்கிறார், இன்று இன்னொன்றைச் சொல்கிறார். 2019 ஆம் ஆண்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிமல் பெரேரா கூறியவற்றை நம்பவில்லை. அப்படியானால் 2026 ஆம் ஆண்டில் நிமல் பெரேராவை எவ்வாறு நம்புவது? இதனைத் தான் கனம்பொருந்திய நீதிபதி அவர்களே ‘பசித்தால் ஓணானையும் உடும்பாகக் காட்டுவது’ என்பார்கள். எனவே இதனை ஒரு விசேட காரணியாகக் கருதி எனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.”
அதன்படி இந்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான் அசங்க எஸ்.போதரகம், சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
















