புது டெல்லியில் செப்டம்பர் 12 ஆம் திகதி பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு தொடங்கவுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
புட்டினின் விஜயத்துக்கு முன்னதாக, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கவும், தங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இந்தப் பயணம் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
மொஸ்கோவிலிருந்து காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெஸ்கோவ், ஜனாதிபதி புட்டின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான தனிப்பட்ட உறவைச் சுட்டிக்காட்டியதுடன், அவர்களது உறவு நடைமுறைக்கு ஏற்றதாகவும் வெளிப்படையானதாகவும் உள்ளதாக விவரித்தார்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை இந்தப் பயணம் உருவாக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
இந்த உச்சிமாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய பெஸ்கோவ், பிரிக்ஸ் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.
இந்த உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் விரிவான பிரிக்ஸ் ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















