தலைமன்னார், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் ஐந்து இந்தியப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 300 இற்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் நேற்று மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் தலைமன்னாரில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த இலங்கைக் கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை கைதுசெய்துள்ளதோடு, அவர்களின் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மீனவர்கள் 30 பேரும், அவர்களின் படகுகளுடன் இன்று காலை மன்னார் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நெடுந்தீவு கடற்பரப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களை நேற்றிரவு கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களிடமிருந்து ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 17 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஒரே நாள் இரவில் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், அதிலிருந்த 47 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















