இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறை இலத்திரனியல் சாதனங்களுடன் இயல்பான அளவை விட கூடுதலாக நேரத்தை செலவழிப்பதால்… அவர்களுடைய உறக்கம் தொடர்பான பழக்கவழக்கத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடலியல் சுழற்சி கடிகாரத்திற்கு எதிராக இவர்கள் தங்களது உடலை வருத்திக் கொள்கிறார்கள். மேலும் பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இல்லாமல் சோம்பல் தன்மையுடனும் , சோம்பேறித்தனத்துடனும், வேலையில் கவனம் செலுத்தாமலும் பணியாற்றுகிறார்கள். இந்தப் போக்கு அவர்களின் வளர்ச்சியை பாதிப்பதுடன் முன்னேற்றத்தையும் தடை செய்கிறது. இந்நிலையில் பலரும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்கான சூட்சம வழிமுறையையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : இயற்கையான நீர் அதாவது ரசாயனங்களால் சுத்திகரிக்கப்படாத நீர்- சோம்பு- பச்சை கற்பூரம் – சிறிதளவு மஞ்சள் தூள்.
நாம் தொடர்ந்து இரவில் உறங்கினாலும் பகலிலும் உறங்கினால் அல்லது உறக்கம் தொடர்பான சோம்பேறித்தனம்- கொட்டாவி- சுறுசுறுப்பின்மை – போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் எம்மை தரித்திரங்களில் ஒருவகையான தேவதை ஆக்கிரமித்திருக்கிறது என பொருள் கொள்ளலாம். இந்த தருணத்தில் இயற்கையான நிலத்தடி நீரை ஒருலீற்றர் முதல் ஒன்றரை லீற்றர் வரை எடுத்துக்கொண்டு அதில் 50 கிராம் சோம்பு, சிறிதளவு பச்சை கற்பூரம் , சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து சூடு படுத்த வேண்டும் . இளஞ்சூட்டில் அந்த நீரை உங்களது முகத்தில் மூன்று முறை ஓங்கி அடித்துக் கொள்ள வேண்டும். இப்படி முகத்தில் இரண்டு கைகளாலும் பிரத்யேக நீரினை அடித்துக் கொள்ளும்போது எம்மில் மாயமாக மறைந்திருக்கும் அந்த சோம்பல் தேவதை விலகி ஓடி விடுவார் அதன் பிறகு மீண்டும் சுறுசுறுப்படைந்து பணியில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேறலாம்.