அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு மக்களுக்குப் பயன் தருவதாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு சர்வதேச நாணய நிதியத்தின் பாதீடு என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஊழல் மோசடிக்கான பிணைமுறி மோசடிக்கு அடிக்குறிப்பு எழுதியவர்களே இந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஊழல் மோசடிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய உற்பத்திகளை அதிகரித்து மக்களுக்கு நிவாரணமளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதற்கமைய, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருளாதார முகாமைத்துவத்துவதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்கள் மீளச் செலுத்தப்படும் என்றும் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


















