நீதிச்சேவையில் இருந்து தான் ஒருபோதும் விரும்பி ஓய்வு பெறவில்லை என்றும், கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான ‘சேவை நலன் பாராட்டு விழா’ லண்டனில் கடந்த 01.11.2025 திகதி அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை உணர்வுப்பூர்வமாக கூறியிருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தில் 50 ஆண்டுகால வரலாற்றில் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்ட தமிழர் என்ற பெருமையை கொண்டுள்ளேன்.
2024 ஆம் ஆண்டு 50ஆம் வருட மேல் நீதிமன்ற பொன்விழா எனது தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 20 அன்று புதிய ஜனாதிபதி இலங்கையில் தெரிவானார். அவருடனான சந்திப்பு தொடர்பில் உரிமையுடன் எனது கடிதத்தை எழுதியிருந்தேன்.
இதன்படி அவரை சந்திக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 அன்று எம்மை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. எனது தலைமையில் 10 நீதிபதிகள் குறித்த சந்திப்பில் கலந்துக்கொண்டோம். அங்கு இருந்த நீதிபதிகளில் நான் மட்டுமே தமிழராக இருந்தேன். என்னுடன் வருகைத்தந்த அனைவரும் எனது பதவி நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 90 நீதிபதிகளின் நானே முதலிடத்தில் இருந்தேன். மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இருந்து 4 நீதியரசர்கள் உயர் நீதிமன்றுக்கு பதவி உயர்வு பெற்றனர்.
இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு வெற்றிடங்கள் நிலவியது. எனக்கு அன்றைய தினத்தில் இருந்து 61 வயதாவதற்கு 8 நாட்களே(ஜனவரி 20) இருந்தன. அதற்குள் பதவி உயர்வை வழங்கவேண்டும் இதுவே இலங்கையின் சட்டம்.
ஆனால் ஜனவரி 13 அன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனா சென்றார். மீண்டும் 18 ஆம் திகதி நாடு திரும்பினார். 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறுதியாக ஜனவரி 20 அன்று நீதிமன்றை விட்டு வெளியேறியிருந்தேன்.
எனக்கு பதவி உயர்வு தந்திருந்தால் இன்னும் 4 ஆண்டுகள் நீதித்துறையின் செயற்பாட்டை முன்னெடுத்திருப்பேன். இதன்போது நான்கு கடிதங்கள் எழுதியிருந்தேன். நான் விரும்பி ஓய்வு பெறவில்லை. கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன் என கூறியிருந்தேன். அந்த நான்கு கடிதத்துக்கும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. நான் ஒரு நீதிபதியாக யாரையும் குறைசொல்ல முடியாது.
இன்றும் கூட இந்தப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்படலாம். ஆனால் நான் அதைத் தேடித் துரத்தவில்லை.
நீதி, சட்டம், நியாயம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்காக மாத்திரமே நான் தலைக்குனிந்தேனே தவிர வேறு ஒன்றுக்கும் தலை வணங்கவில்லை நீதித்துறை புனிதமானது.’ என்றார்.

















