சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரை சேர்ந்த சிறுமியொருவர் விருது பெற்றுள்ளார்.
மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா என்பவரே இவ்வாறு விருது பெற்றுள்ளார்.
சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் Best Monologue என்ற விருதை அவர் வென்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில்“International Art & Heart Film Festival – 2025” சர்வதேச குறுந்திரைப்பட விழா இடம்பெற்றுள்ளது. இதில் மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மன் இயக்கிய ‘மடமை தகர்’ எனும் குறுந்திரைப்படத்திற்காக குறித்த சிறுமி விருது பெற்றுள்ளார்.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக குறித்த சிறுமி நடித்துள்ளார்.
உயிர்மாய்த்து கொள்வது என்பது ஒரு தீர்வல்ல என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘மடமை தகர்’ குறுந்திரைப்படம் இதற்கு முன் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் ‘சிறந்த இயக்குநர்’ என்ற விருதையும் வென்றிருந்தது.
இப்போது மீண்டும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால் மன்னார் மண்ணைச் சேர்ந்த இளம் திறமைசாலிகளுக்கு இது பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதன்முறையாக சினிமா துறையில் ஒரு சர்வதேச நாட்டில் சிறந்த நடிப்பிற்கான விருதாக இந்த விருது அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















