சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் 1,000 திட்டம் நாளை (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதற்கமைய, களுத்துறை தெற்கு நல்வாழ்வு மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை முற்பகல் 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்குச் சமாந்தரமாக மாவட்ட மட்டத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்புச் சிகிச்சைக்கும் முன்னுரிமை அளித்து, ஆரம்ப சுகாதார சேவையில் ஒரு புதிய திருப்பத்தை இத்திட்டம் குறிக்கின்றது.
தற்போதைய வைத்தியசாலைக் கட்டமைப்பில் நோயாளி ஒருவர் வைத்தியரைச் சந்திக்கச் செல்லும்போது ஏற்படும் நெரிசல் மற்றும் வரிசைகள் காரணமாக, நோயாளியின் நிலைமை குறித்து விரிவாகக் கலந்துரையாடி ஆலோசனை வழங்குவதற்கு வைத்தியர்களுக்குக் கிடைக்கும் நேரம் வரம்பிற்குட்பட்டதாக உள்ளது.
அத்துடன், பொதுமக்கள் தமது சுகாதாரப் பிரச்சினைகள் குறித்துப் போதுமான நேரத்தைச் செலவிட்டு கலந்துரையாடுவதற்கோ அல்லது தடுப்புச் சுகாதார முறைகள் குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கோ சந்தர்ப்பம் கிடைக்காமையும் ஒரு பிரச்சினையாகும்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் சமூக மட்டத்தில் சுகாதார ஆலோசனைகள், பரிசோதனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் ‘ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள்’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மையங்கள் வழக்கமான மருந்தகம் அல்லது வெளிநோயாளிப் பிரிவுக்கு (OPD) மட்டும் வரையறுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயுற்ற பின்னர் சிகிச்சையளிப்பதை விட, நோய்கள் ஏற்படுவதை முன்னரே தடுப்பது மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு வைத்தியர், சமூகச் செவிலியர் குழு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















