டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 7 ஆயிரம் பேரை அடுத்துவரும் 2 அல்லது 3 மாதங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
முற்றாக அழிவடைந்த வீடுகளின் எண்ணிக்கை 6,138 ஆக உள்ளதாகவும், அந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்குச் சில காலம் எடுக்கும் என்றும் கூறினார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளில் ஆபத்து இல்லை எனக் கண்டறியப்பட்டால், அவர்களை மீண்டும் அந்த வீடுகளிலேயே குடியேற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான பணிகளை விரைவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், வீடுகளை முழுமையாக இழந்தவர்களைக் குடியமர்த்துவதே தற்போதுள்ள பிரதான சவாலாகும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவாகச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மண்சரிவு அல்லது அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தவர்களைக் குடியமர்த்துவதற்காக, பொருத்தமான அரச காணிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையில் உள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
நிவாரண உதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், ‘1904’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.
















