யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வளாகங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யால தேசிய வனம், 44 பாலூட்டி இனங்கள், 215 பறவை இனங்கள், 47 ஊர்வன இனங்கள் மற்றும் 21 மீன் இனங்களின் வாழிடமாக திகழ்கிறது.
இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுள்ள காலம் ஒகஸ்ட் முதல் மார்ச் வரை என்பதுடன், இம்முறை சுற்றுலாப் பருவத்தை எல் நினோ (El Niño) நிலைமை கடுமையாகப் பாதித்துள்ளது.
அதிக வெப்பமான வானிலை காரணமாக யால தேசிய வனத்தின் பல நீர்நிலைகள் வற்றிப் போயுள்ளதுடன், இதனால் பூங்காவில் வாழும் விலங்குகளுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மேலும், அதிக வறட்சியான வானிலை காரணமாக மரங்கள், செடிகொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து போயுள்ளதால், யால பூங்காவின் விலங்குகள் உணவுப் பற்றாக்குறைக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
நிலவும் சூழ்நிலையினால் விலங்குகளின் தாகத்தைத் தணிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, மாணிக்க கங்கையின் 4 இடங்களில் சூரிய மின்தகடு மோட்டார்களைப் பயன்படுத்தி பெறப்படும் நீரை, நிலத்தடி குழாய்கள் மூலம் பூங்காவில் உள்ள குளங்களுக்கு திறந்துவிட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தினமும் சுமார் 2 இலட்சம் லீட்டர் நீர் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பூங்காவின் செயற்கை மற்றும் இயற்கை குளங்களை நிரப்பும் பணியையும் வனஜீவராசிகள் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, நிலவும் வறட்சியான வானிலையால் உணவையும் நீரையும் தேடிச் செல்லும்போது விலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, ஒரு மாத காலத்திற்கு யால தேசிய வனத்தின் மண்டலம் 01 மற்றும் 02 ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

















