-உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் எரிவாயு களஞ்சியப்படுத்தும் வசதிகளில் உள்ள போதாமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மொத்த எரிவாயு களஞ்சியப்படுத்தும் திறன் 8,000 மெட்ரிக் டொன்களாகும். லிட்ரோ நிறுவனத்திற்கு மாத்திரம் நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 மெட்ரிக் டொன் எரிவாயு தேவைப்படுகிறது.
இதன்படி, நாட்டில் உள்ள இருப்பானது ஆகக்கூடுதலாக ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமானதாகும். இந்தக் களஞ்சியப்படுத்தும் வசதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தற்போது ஒரு பெரிய கப்பல் மாலைதீவில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலமே தலா 8,000 மெட்ரிக் டொன் எரிவாயு இலங்கைக்குக் கொண்டுவரப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 8,000 மெட்ரிக் டொன் எரிவாயு துறைமுகத்திற்கு வந்து சேர்கிறது. இருப்புகள் தீரும் வரை காத்திருக்காமல் தொடர்ச்சியாக இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனாதிபதி விளக்கமளித்தார்.
எரிவாயு கொள்கலன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, லிட்ரோ நிறுவனம் 100,000 புதிய கொள்கலன்களுக்கான வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கான கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. மஞ்சள் நிற கொள்கலன்களை பயன்படுத்துவோர் நீல நிற கொள்கலன்களுக்கு மாற முற்பட்டபோது ஏற்பட்ட அதிகரித்த தேவையே இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியது.
எரிவாயு மற்றும் எரிபொருள் விவகாரத்தில் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என ஜனாதிபதி உறுதியளித்தார்.
நாளொன்றுக்கான தேவை 1,200 மெட்ரிக் டொன்னிலிருந்து திடீரென 1,800 மெட்ரிக் டொன்னாக அதிகரிக்கும் பட்சத்தில், கையிருப்பானது 5 நாட்களுக்குள்ளேயே தீர்ந்துவிடும் அபாயம் உள்ளதாகவும், இவ்வாறான சவால்களுக்குத் தீர்வு காண அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


















