-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி, நேற்று உயிரிழந்தார்.
கிளிநொச்சி – கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பரமானந்தன் கிருபாகரன் (வயது-43) என்பரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது.
இதையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
















