கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்படும் எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாகப் பல சிரமங்களுக்கும், சமூக ரீதியான ஓரங்கட்டல்களுக்கும் உள்ளாகி வருவதாக அமைச்சர் கூறினார்.
காணாமற்போன விபத்துக்குள்ளான அல்லது வெளிநாடுகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நிலையை மாற்றும் நோக்குடன் ஜனாதிபதி நிதியம் ஊடாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
அதன்படி சாதாரண தர மாணவர்களுக்கு மாதம் 3,000 ரூபாவும், உயர்தர மாணவர்களுக்கு மாதம் 5,000 ரூபாவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் 8,000 ரூபாவும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


















