-வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்-
வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருபவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவனைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட காலதாமதம் மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்ற நிலை ஏற்படுகிறது. அதனால் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டு பிரஜைகள் தொழில் நிமித்தம் பல்வேறு நாடுகளில் இலட்சக் கணக்கனோர் வாழ்கின்றனர் அதேநேரம் புதிய அல்லது மேலதிக கற்கை நெறிகளுக்காகவும் பல்லாயிரம் பேர் வாழ்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவணைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட காலதாமதம் மற்றும் பலவேறு சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அதனால் தேசிய முக்கியத்துவம் கருதி பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். வெளிநாடுகளில் உள்ள எமது தூதரகங்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் கடவுச்சீட்டு புதுப்பிக்க சமர்ப்பிக்கப்பட்டு எத்தனை நாட்களுக்குள் புதுப்பித்து மீள வழங்கப்படும்? 2024 ஆம் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் மற்றும் 2025 ஆம் ஆண்டின் இன்று வரைக்கும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் ஆண்டு வாரியாக எத்தனை? புதுப்பிக்கப்பட்டு மீள வழங்கப்பட்டவையில் 2024 ஆண்டுக்குரியதும் அதற்கு முந்தைய ஆண்டுக்குரியதும் மற்றும் 2025ஆம் ஆண்டுக்குரியதும் ஆண்டு வாரியாக எத்தனை?
தேவையான அனைத்து ஆவணங்களுடனும் பூரணமாக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் சில விரைவாகவும், சில மிகக் கால தாமதாகவும் வழங்கப்படுவது ஏன்? இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் எதும் முறைகேடான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா? ஆம் எனின் அவற்றை கண்காணிக்கும் பொறிமுறைகள் எதும் உண்டா? நடைமுறையில் இருக்கின்ற செயற்பாட்டு வடிவமானது காலதாமதத்தை ஏற்படுத்துகின்றது என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருப்பதனால் மேம்படுத்தப்பட்ட நவீன நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த முடியுமா? ஏன கேள்வி எழுப்பியிருந்தார்.


















