கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும்.
அக்கட்டடம் குறித்து திங்கட்கிழமை தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.
அந்தக் கட்டடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமும் வழங்கி உள்ளேன்.
அந்த கட்டடத்திற்கு மின்சார இணைப்பு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஜி ராஜபக்ஷ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணத்தில் எனது கையொப்பம் இல்லை. அந்த ஆவணத்தில் உள்ள எழுத்துக்களும் தெளிவற்று காணப்படுகிறது.
எனவே கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடம் எனக்கு சொந்தமானது அல்ல என நான் உறுதியாக கூறுகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


















