-நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க-
-மு.தமிழ்ச்செல்வன்-
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய்நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நலன்கருதி குறிப்பாக பரந்தன் பகுதியில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தேவை கருதியும், பொது மக்களுக்கான குடிநீர் தேவை அதிகரித்துச் செல்லும் நிலைமையையும் அதாவது முக்கியமாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் அதிகரித்து வரும் சிறுநீரக பாதிப்புக்களை கருத்தில் கொண்டும் கிளிநொச்சி மாவட்ட நீர் விநியோகத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கிராமங்களுக்கான குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும். அத்தோடு முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கும் நீர் விநியோகம் வழங்கப்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி சமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


















