கிழக்கு பல்கலைக்கழகத் திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீட கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஏற்பாட்டுக்குழுவின் சார்பாக திருகோணமலை வளாகத்தின் முதல்வர் கே.ரி.சுந்தரேசன், சிரேஷ்ட விரிவுரையாளர்களான இசார் அலி, தனுஷியா, மிதுரேந்தரன், ஜெனிஸ்டன், ஜெனிட்டா, புஸ்பிகா கனேகொட ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

குறித்த 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடானது தன்னிறைவு வாய்ந்த சூழல் நீதி சமுதாயம் வழியாக அமைதியாக அடைவோம் பண்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை இணைப்போம் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படவுள்ளது. இதற்கான பிரதான பங்களிப்பினை இந்தியாவில் உள்ள மரிட்டன் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
இதனை முன்னிட்டு லண்டன், பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரைகள் புத்தகத்தினூடாக வெளியிடப்படவுள்ளது.
அத்துடன் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குமாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, சிறப்பு விருந்தினர்களாக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் டெரன்ஸ் முஜீதின் மற்றும் இந்திய மரிட்டன் பல்கலைகழகத்தின் பரிந்துரையின்கீழ் அனுப்பப்பட்ட ரமேஸ் கனகந்தே ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
குறித்த நிகழ்விற்கான அனுசரணையினை இந்தியன் ஒயில் நிறுவனம், அமானா வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஈ-சொப்ட் நிறுவனம், சி.எம்.ஏ, கூல் வோட்டர், டோக்கியோ சிமெந்து கம்பனி, ஏ ளுஙரயசந மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியோர் வழங்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.



















