ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளதுடன், அங்கு வரவிருந்த அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று (11)வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்றையதினம் அதிகாலை 4:50 மணி முதல் இந்த வான்பரப்பு மூடல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, குவைத் வான்பரப்பிற்குள் நுழைந்த பல “பகைமைப் பொருட்களை” தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக குவைத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ‘குவைத் செய்தி முகமை’ செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் வான்பரப்பில் நீண்ட நேரம் வட்டமடித்தபடி காத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்கால மோதல்களில் குவைத் சர்வதேச விமான நிலையம் நேரடியாக ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளங்களை இலக்கு வைத்து தாங்கள் கடும் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
குவைத்தில் உள்ள ‘அலி அல் சலேம்’ மற்றும் ‘அஹ்மத் அல் ஜாபர்’ ஆகிய இரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளங்கள் உட்பட பிராந்தியத்தில் உள்ள 18 முக்கிய அமெரிக்க இராணுவ இலக்குகளை இருகட்டங்களாகத் தாக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அண்மையில் தென் ஈரானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை இது என ஈரான் வர்ணித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தற்போது குவைத், பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர்ச் சூழல் உருவாகியுள்ளது.
















